கோவை: கோவை அருகே 50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருட முயன்ற நபரை அரச்சகர்கள் மடக்கிப் பிடித்தனர்
கோவை அருகே உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில், நள்ளிரவில் புகுந்து வெண்கல விநாயகர் சிலையைத் திருடிச் செல்ல முயன்ற நபரை, அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கையும், களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் உள்ளூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில், 9ம் தேதி இரவு சந்தேகப்படும் படியாக நுழைந்த நபர் ஒருவர், அங்கு இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள, 50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையைத் திருடி உள்ளார்.
பின்னர், யாரும் பார்க்காதவாறு அந்தச் சிலையை ஒரு வெள்ளை நிற உரைப்பையில் மறைத்து வைத்துக் கொண்டு, கோவிலில் இருந்து நழுவ முயன்று உள்ளார்.
அப்போது, அவரது அசைவுகளில் சந்தேகம் அடைந்த கோவில் அர்ச்சகர்கள், சம்பவ இடத்திற்கு வந்த ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த புகார்தாரர் சதாசிவம் (68) மற்றும் குமாரசாமி ஆகியோர் துரிதமாகச் செயல்பட்டு, அந்த ஆசாமியைச் சுற்றிலும் வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரது வைத்திருந்த பையைச் பார்த்த போது, அதற்குள் திருடப்பட்ட விநாயகர் சிலை இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக பொதுமக்கள், அவரையும் சிலையையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபர் சங்கனூர் சாலையைச் சேர்ந்த நடராஜன் (54) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


