கோவை: காரீப் சாகுபடிக்கு 12166 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ள நிலையில், MRP விலையை விட கூடுதலாக உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை வேளாண் இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கோவை வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் எதிர்வரும் காரீப் பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா உர வகை 3861 மெட்ரிக் டன், டிஏபி உர வகை 1056 மெட்ரிக் டன், பொட்டாஷ் உர வகை 2548 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் உர வகை 1228 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உர வகை 3473 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மண் ஆய்வு செய்து அதற்கு ஏற்ப உரங்களை பயன்படுத்தியும் அல்லது தமிழ் மண்வள செயலியில் உள்ள பரிந்துரைகளுக்கேற்ப உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உர விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து வகை உரங்களையும், குறிப்பாக யூரியா மற்றும் டிஏபி உரங்களை விவசாயிகளின் சாகுபடி பரப்பு மற்றும் பயிரின் தேவைக்கு தகுந்தாற்போல அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து விநியோகம் செய்ய வேண்டும்.
Also Read: Coimbatore Weather | கோவை வானிலை அறிக்கை – வெயில், மழை எப்படி? முழு விவரம்
மேலும், விற்பனையாளர்கள் உர விற்பனை மேற்கொள்ளும் போது விவசாயியின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் கையொப்பத்துடன் பதிவேடு பராமரித்து விற்பனை ரசீது வழங்க வேண்டும்.
நானோ யூரியா, நானோ டிஏபி, வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கக்கூடிய உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்து உரங்களை பயன்படுத்துவதன் மூலம் உர பயன்பாட்டை குறைத்து, மண்ணின் வளத்தை அதிகரித்து, உர செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
Coimbatore Power Cut: கோவையில் ஜூன் 9-ஆம் தேதி மின்தடை பகுதிகள்…
யூரியா கடத்தல், பதுக்கல், MRP விலையை விட அதிகமாக விற்பனை செய்தல், முறையற்ற பதிவுகள் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உர விற்பனையாளர்கள் மீது உர கட்டுப்பாடு சட்டம், 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உர விற்பனை நிலையத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


