கோவை : செல்வபுரத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி சிலிண்டரை வெளியில் பயன்படுத்திய பேக்கரி உரிமையாளருக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் பள்ளி அருகே உள்ள பேக்கரியை சிவராமகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பேக்கரியில் உணவு பொருட்கள் வெளிப்புறத்தில் தயாரிக்கப்பட்டதை கவனித்தனர்.
அப்போது எரிவாயு சிலிண்டர் வெளியில் வைத்து பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், போலீசார் உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், போலீசாரின் அறிவுறுத்தலை அவர் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி அருகே இந்த செயல் நடந்ததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட வாய்ப்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து செல்வபுரம் போலீசார் சிவராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


