கோவை: முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வந்தன.
இதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இந்த ஆய்வின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
மேலும், அடையாளம் காணப்பட்ட இந்த 717 டாஸ்மாக் கடைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, மாநிலம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 டாஸ்மாக் கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடும் பணிகள் நடைபெற்று வந்தன.
டாஸ்மாக் வாணிபக் கழகத்தின் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 163 கடைகள் மூடவும், கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறிப்பாக சிங்காநல்லூர், காந்திபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, கோவை மண்டலத்தில் அடையாளம் காணப்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி விட்டதாக டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் (கோவை) கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கடைகளில் பணியாற்றி வந்த 193 பணியாளர்களுக்கு இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான இடங்களில் வேலை அமைத்து தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.



