கோவை:சுந்தராபுரம் அருகே டேட்டிங் ஆப் மூலம் அழைத்து வாலிபரை தாக்கி பணம், செல்போன் மற்றும் வாகனம் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
போத்தனூரைச் சேர்ந்தவர் பிரபு (35) (பெயர் மாற்றம்). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரபுவை 2 வாலிபர்கள் செல்போனில் கிரைண்டர் ஆப் (Grindr)ம் தொடர்பு கொண்டு ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளனர்.
பின்னர் அவரை சுந்தராபுரம் அருகே பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. டாஸ்மார்க் கடை பின்புறம் உள்ள மார்க்கெட் அருகில் வரும்படி கூறியுள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்பி பிரபு மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளார். அப்போது பிரபுவை தொடர்பு கொண்ட 2 வாலிபர்களும் அங்கு இருந்தனர். பின்னர் அவரை மைதானத்திற்கு அழைத்து சென்று திடீரென தாக்கினர்.
அதன் பிறகு பிரபுவின் செல்போனை பறித்து, ரூ.30 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிரபு சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இத்தகைய டேட்டிங் ஆப்கள் மூலம் இளைஞர்கள் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


