கோவை: அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் நடிகர் ரவி மரியா.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா காளப்பட்டி சுற்றுப் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாரை ஆதரித்து காளப்பட்டி, வீரியம் பாளையம், நேரு நகர், ஆர் ஜி புதூர் சுற்றுப் பகுதிகளில் நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா நடந்து சென்றும், பிரச்சார வாகனத்தில் சென்றும் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக மலர்கள் தூவி வரவேற்று ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து அங்கிருந்த மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா பேசும்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறார். திமுக ஆட்சியில் பட்ட சின்ன சின்ன கஷ்டங்களை போக்கிக் கொள்ள இந்த பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறார். அதேபோல் ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே குலவிளக்கு திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பப் பெண்களுக்கும் மாதம் 2000 வழங்க உள்ளார். மேலும் தீபாவளிக்கு பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்குகிறார் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.


