கோவை: கோவை மாநகரில் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் தீயணைப்பு துறைக்கு கடந்த ஒரு மாதத்தில் 30 அழைப்புகள் வந்துள்ளன.
இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:
கோவை மாநகரின் பல பகுதிகளில் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததால், பொதுமக்கள் சாலையோரங்கள் மற்றும் காலி இடங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். கடும் வெயில் காரணமாக அந்த குப்பைகள் தானாகவே தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மேலும், சிலர் குப்பைகள் அதிகமாக தேங்குவதால் அவற்றுக்கு தீ வைத்து எரிப்பதும் தொடர்கிறது. இதனால் தீ மளமளவென பரவி, அடர்ந்த புகை வெளியேறுகிறது. இதன் காரணமாக அருகில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
புகை மூட்டம் அதிகரிக்கும் போது பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர்.
இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குப்பை தீ விபத்துகள் தொடர்பாக 30 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், மாநகராட்சி அறிவுறுத்தும் முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், பொது இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது என்றும் எச்சரித்தனர்.
அதேபோல், புதர்கள் மற்றும் காலி இடங்களில் உடைந்த கண்ணாடி பொருட்களை வீசுவது ஆபத்தானது என்றும் தெரிவித்தனர். வெயில் தாக்கத்தில் கண்ணாடி லென்ஸ் போல செயல்பட்டு தீ விபத்துக்கு காரணமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இதுபோன்ற தீ விபத்துகள் குறையும் என தீயணைப்பு துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


