கோவை :உடலை மெருகேற்றும் நோக்கில் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்த ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடமதுரை குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (33). இவர் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
உடல் கட்டை அதிகரிக்கவும், உடலை மெருகேற்றவும் வினோத் குமார் சில ஊசிகள் மற்றும் பல்வேறு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது உடல்நலத்திற்கு ஆபத்தாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் பலமுறை எச்சரித்தும், அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி மாலை ஜிம்மில் வினோத் குமார் அசைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் வினோத் குமாரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


