கோவை: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகர காவல்துறை மற்றும் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து துடியலூர் பகுதியில் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டது.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெற்ற இந்த சோதனையில், வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் நவீன டெசிபல் அளவீட்டு கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டன. 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பிய 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் லாரிகளில் இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு சாலை விபத்துகள் 22 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கும் நோக்கில், மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, அதிவேகமாக செல்லும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள், கண்களை கூசச் செய்யும் எல்.இ.டி. விளக்குகள் மற்றும் விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்ட பம்பர்கள் ஆகியவை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சோதனையின் போது, அதிக வெளிச்சம் வீசிய எல்.இ.டி. விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அனுமதியின்றி பொருத்தப்பட்ட பம்பர்களும் அகற்றப்பட்டன. மேலும், வே-பிரிட்ஜ் மூலம் சரக்கு வாகனங்களின் எடை பரிசோதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடை ஏற்றியிருந்த வாகனங்களுக்கு கூடுதல் ஒவ்வொரு டன்னிற்கும் ரூ.2,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் கோவை மேற்கு மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெரியசாமி, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற அதிரடி வாகனச் சோதனைகள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





