கோவை : கோவை வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் மற்றும் வீரமாச்சியம்மன் கோவில்களில் நடைபெற்ற ஆடிப்பண்டிகை திருவிழாவில் கரகம், திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவை வேலாண்டிபாளையம் சின்னத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்காளியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ வீரமாச்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடிப்பண்டிகை திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா, ஸ்ரீ பொன்காளியம்மனுக்கு 1008 குடம் தீர்த்த அபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றதுடன், தினமும் கும்மியடித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, வேலாண்டிபாளையம் பெரிய விநாயகர் கோவிலில் இருந்து கரகம் மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றதுடன், சீர்வரிசை தட்டுகளுடன் திருக்கல்யாண உற்சவமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் படைத்தல், வீரமாச்சியம்மனுக்கு அணிக்கூடை எடுத்தல், மாவிளக்கு செலுத்துதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று வேலாண்டிபாளையம் பெரிய விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் முத்தாளை மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் திருவீதியுலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.
விழாவில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, மறுபூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





