கோவை: கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை என்றும், இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் தங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை என்றும் கூறி, கோவையில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவைப்புதூர் சமத்துவ நகரில், குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, தங்கள் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக தங்களது குடியிருப்புக்கு தண்ணீர் வரவில்லை என்றும், இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற திருநங்கை ஒருவர் குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்குள் நுழைந்து, “செயற்பொறியாளர் ஜீவானந்தம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்பேன்” என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
“கோவையில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த எங்களை, குடிசை மாற்று வாரியத்தில் வீடு கொடுப்பதாக கூறி அழைத்து வந்து, எந்த அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை.

கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வராமல் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். இது குறித்து புகார் அளித்தால், எங்களை அதிகாரிகள் மனிதர்களாக கூட மதிப்பதில்லை.
இப்போது குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் செயற்பொறியாளர் ஜீவானந்தம் இதுவரை எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்” என்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாளை சமத்துவபுரம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்வதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



