கோவை: கோவை வீரகேரளம் பிரதான சாலையில், மணி (53) என்பவர் சாலையோரத்தில் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று அவர் தனது கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது.
மோதிய வேகம் அதிகமாக இருந்ததால், மணி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்.
எனினும், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் அப்பகுதி பொதுமக்கள், பலத்த காயமடைந்த மணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அருகில் உள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன.
Video
அதில், அதிவேகமாக வந்த கார் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்வது பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் மற்றும் அதன் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


