கோவை:வீடு வாங்க வருவதாக நடித்து 6 பவுன் செயின் பறிப்பு; 3 பேரை சுற்றிவளைத்து கைது செய்த கோவை போலீஸ்
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை தொடர்பு கொண்ட பேபி என்ற இளைஞர், வீடு வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, சிவகுமார் தனது இருசக்கர வாகனத்தில் பேபியை அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள வீட்டை காண்பித்துள்ளார்.
பின்னர், பன்னிமடை பகுதியில் தனக்கு சொந்தமான இடம் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறிய பேபி, சிவகுமாரை பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது பேபி, தனது நண்பர்களான மோகனகிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோரை சம்பவ இடத்திற்கு வருமாறு செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி மாலை அவர்கள் அங்கு வந்த நிலையில், மூவரும் சேர்ந்து சிவகுமார் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையில், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பேபி என்கிற மாயா (21), வடவள்ளியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பொருட்களை மீட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


