கோவை: தேர்தல் முடிந்தவுடன் விதிகள் தளர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்று கோவை சுமங்கலி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இந்த விதிகளின்படி அரசு இயந்திரத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது, புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
முக்கியமாக ரூ.50,000க்கும் மேல் பணம் மற்றும் தங்க நகைகளை கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
விதிகளில் தளர்வு
இந்த விதிகளால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். காய்கறி விற்பனையாளர்கள், சுப நிகழ்ச்சிகளுக்காக துணி மற்றும் நகைகள் வாங்கச் சென்றவர்களின் பணமும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் 23ம் டேதி முடிவடைந்ததையடுத்து, இந்த விதிகள் தளர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நேற்று முதல் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நகை விற்பனையாளர்கள், இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவை சுமங்கலி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில் விஸ்வநாதன் கூறியதாவது:–

தங்கம் விலையேற்றத்தால் கோவையில் ஏற்கனவே 20 முதல் 25 சதவீதம் வரை விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது. இதனுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்க அச்சம் கொண்டனர். இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் வழக்கமாக இருக்கும் விற்பனையின் பாதியளவு கூட நடைபெறவில்லை.
மக்கள் தயக்கம்
பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவதற்கு கூட மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஏனென்றால், சேமித்து வந்த பழைய நகையைக் கொண்டு வரும்போதோ, அல்லது புதிய நகையை வாங்கிச் செல்லும்போதோ பறக்கும் படையினர் பிடித்தால் அது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கும் என்ற தயக்கம் மக்கள் மத்தியில் இருந்தது.
இந்த முறை தேர்தல் முடிந்த உடனேயே விதிகள் தளர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இனி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோலவே பல்வேறு துறைகளிலும் வழக்கம் போல் வியாபாரம் நடைபெற தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு உதவிகரமாக இருக்கும்.
Read Also: இன்றும் நாளையும் ஜிடி மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை…
அட்சய திருதியை வந்தால் தங்கம் விலை அதிகரிக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். தங்கத்தின் விலையை இங்குள்ள வியாபாரிகள் தீர்மானிப்பதில்லை. சர்வதேச சந்தை விலையின் அடிப்படையிலேயே தங்கம் விலை தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


