கோவை: மயக்க சாக்லேட் கொடுத்து பஸ்சில் முன்னாள் அரசு பெண் ஊழியரிடம் நகை அபேஸ் செய்த மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (70). முன்னாள் அரசு ஊழியர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகன் ராஜேஷ் (31) என்பவர் கோவை கணபதி பராசக்தி நகரில் தங்கிருந்து தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
Read news:கோவையில் திடீர் சோகம்… வேலை செய்தபோது வாலிபர் பலி
இந்த நிலையில் லட்சுமி கோவையில் உள்ள ராஜேஷின் மகனான தனது பேரனை பார்க்க கடந்த 12ம் தேதி ஈரோட்டில் இருந்து அரசு பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். அவரது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அந்த பெண் சிறிது நேரத்தில் லட்சுமியுடன் பேச தொடங்கினார். அவரும் பதிலுக்கு பேசி வந்துள்ளார். அப்போது அந்த பெண் தனது பையில் இருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து சாப்பிட்டார். பின்னர் அந்த பெண், லட்சுமிக்கும் ஒரு சாக்லெட்டை கொடுத்தார். முதலில் லட்சுமி வேண்டாம் என்று கூறியுள்ளார்.
Read news: கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது
தொடர்ந்து அந்தப் பெண், லட்சுமியிடம் வற்புறுத்தியதால் அதை வாங்கி லட்சுமி சாப்பிட்டு உள்ளார். பாதி சாக்லெட் சாப்பிட்டதும் அது கேட்டு போயிருப்பதாக கூறி லட்சுமி சாக்லெட்டை வீசினார். அந்த பெண் என்ன ஆச்சு என்று கேட்டு தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் லட்சுமி மயங்கினார்.
பின்னர் அந்த பெண் அவரது கழுத்தில் இருந்த 6.5 பவுன் தங்க நகையை கழற்றி பஸ்சில் இருந்து இறங்கி தப்பினார்.
பஸ் சின்னியம்பாளையம் அருகே வந்த போது லட்சுமி மயங்கி கிடந்ததை பார்த்த கண்டக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே கண்டக்டர், டிரைவரிடம் கூறி பஸ்சை கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தினர்.
தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவர், பயணிகள் உதவியுடன் லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து பீளமேடு போலீசார் மற்றும் லட்சுமியின் மகன் ராஜேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். போலீசார் லட்சுமியிடம் விசாரணை நடத்திய போது அவர் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து பீளமேடு போலீசார் ராஜேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் பஸ்சில் லட்சுமியிடம் நகையை அபேஸ் செய்த பெண் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே போலீசார் பஸ் வந்த வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பகிர்வை உங்கள் உற்றார் உறவினர்க்கு பகிர்ந்து அவர்களை பாதுகாத்திடுங்கள் மக்களே..!



