கோவை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் நிதி வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து தன்னார்வலர்கள் வனிதா மற்றும் கோகிலா கூறியதாவது:
“நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். தினமும் இரண்டு மணி நேரம் பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் மாதம் ரூ.5,500 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், திட்டத்திற்கான நிதி இன்னும் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு, அந்த ஊதியமும் வழங்கப்படாமல் இருப்பது வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன், எங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000 ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.



