கோவை: கோவையில் செயலி மூலம் வலையில் சிக்கிய ஐடி ஊழியர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஐடி ஊழியர் ஒருவர், தனது செல்போனில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்த நிலையில், அந்த வாலிபர் ஐடி ஊழியரை பி.கே.புதூரில் உள்ள ஒரு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்றபோது மேலும் சிலர் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த கும்பல், ஐடி ஊழியரை கட்டையால் தாக்கி மிரட்டியதுடன், அவரிடம் இருந்த ரூ.1,400 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஐடி ஊழியர், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த விஷ்ணு (19), கபில் மாதேஷ்வரன் (19), சக்திவேல், கதிரவன் உள்ளிட்ட 5 பேர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து விஷ்ணு மற்றும் கபில் மாதேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.


