கோவை: SPS டிராவல்ஸ் நிறுவனமும் காவல்துறையும் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி, கோவையில் இளம் பெண் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னையை சேர்ந்த கவி பிரியா, மேக்கப் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 30-ம் தேதி கோவையில் இருந்து தென்காசிக்கு எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
பயணத்தின் போது பேருந்து முதலில் பொள்ளாச்சியிலும், பின்னர் ஒட்டன்சத்திரத்திலும் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மாற்று பேருந்து மூலம் தென்காசிக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், பேருந்தின் லக்கேஜ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கவி பிரியாவின் டிராலி பை காணாமல் போயுள்ளது. அந்த பையில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மேக்கப் பொருட்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சம்பவம் தொடர்பாக கோவையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
அதன்படி, கோவை காட்டூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய கவி பிரியா, கோவை காந்திபுரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவன அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஒரு வாரமாக டிராவல்ஸ் நிறுவனத்தினரும் காவல்துறையினரும் தன்னை அலைக்கழிப்பதாகவும், காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும், தனது தொழிலுக்கு தேவையான விலை உயர்ந்த மேக்கப் பொருட்கள் பையில் இருந்ததாகவும், அவை காணாமல் போனதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.
தனக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என தெரிவித்த அவர், அலுவலகம் முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர் தனது போராட்டத்தை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


