கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மையம், வேளாண் துறையில் சிறந்த முறையில் பயிற்சி பெற்ற மற்றும் புதிய சிந்தனைகள் கொண்ட திறமையான இளைய தலைமுறையினரை முன்னணி நிறுவனங்களுடன் இணைக்கும் நோக்கில், வரும் 2026 ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழா 2026-ஐ நடத்த உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் இருந்து இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தொழில்நுட்பம், முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பு பயலும் 2000-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு இளம் பட்டதாரி மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய பங்கேற்க உள்ளனர்.
எனவே, திறமையான மற்றும் ஆற்றல்மிக்க புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முன்னணி வேளாண் சார்ந்த நிறுவனங்கள். விதை, உரம் மற்றும் பண்ணை இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், சுய வேளாண் தொழில் முனைவோர் நிறுவனங்கள், முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு முகமைகள் இந்த முகாமைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்களின் வருகையையும் காலிப்பணியிட விவரங்களையும் முன்கூட்டியே பதிவு செய்ய கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் நல முதன்மையாளரின் (deansw@tnau.ac.in) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 0422-6611242 என்ற எண்களிலோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்பட்டுள்ளது.


