கோவை: உக்கடம் புதிய பஸ் ஸ்டாண்டில் நடத்துனர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்து, சாப்பிட்ட குப்பைகளை சாலையில் வீசியெறியும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கோவை மாநகரப் பகுதியில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை என சுமார் ஏழு முக்கிய பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்பாட்டில் இயங்கி வருகின்றன. இதில் மிகக் குறுகிய காலத்திற்கு முன்புதான் உக்கடம் பகுதியில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்ட உக்கடம் புதிய பேருந்து நிலையம், முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாகவும், பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறி வருகிறது.
இதனிடையே, பயணிகளை விட அங்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களே இந்த பேருந்து நிலையத்தை அசுத்தப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசுப் பேருந்துகளின் நடத்துனர்கள் தாங்கள் உண்ணும் உணவுக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை, பேருந்துகள் வந்து நிற்கும் “பே” (Bay) பகுதியிலேயே கண்டபடி வீசி எறிந்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன் உச்சக்கட்டமாக, பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருக்கும் பசுமை பூங்கா அருகே உள்ள மதில் சுவர் பகுதியை, சில ஊழியர்கள் தங்களது திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் தனது பேருந்தை நிறுத்திவிட்டு, பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அங்கிருந்த மதில் சுவரில் அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் பட்டப்பகலில் சிறுநீர் கழித்துள்ளார்.
வீடியோ காட்சிகள்
இந்த அநாகரிகச் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர், தனது செல்போனில் அந்த காட்சியை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
“லட்சக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவழித்து கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இப்படித்தான் பராமரிப்பதா? பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுப் பேருந்து ஊழியர்களே இவ்வாறு பொதுவெளியில் அநாகரிகமாக செயல்படலாமா?” என அந்த வீடியோ பதிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கோவை மாநகராட்சி மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



