கோவை: நான் எடப்பாடி பழனிச்சாமியிடம் திட்டு வாங்குவதற்கு மக்கள் தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டி மற்றும் வெள்ளலூர் ஆகிய இரண்டு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம், இந்த முறை ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது உறுதி என்றும் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக ராணுவத்தையே எதிர்த்த மண் இந்த மண் கோவை மக்கள் என்றார்.
மக்களோடு மக்களாக பழகுபவர் இந்த வேட்பாளர் உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார் என்றார். உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன் என தெரிவித்தார்.
பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை உதயநிதி ஸ்டாலின் இடம் தெரிவித்தனர்.
ஒவ்வொருவரும் திமுக திட்டங்களை இதர வாக்காளர்களிடம் எடுத்து தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்ட அவர் கிணத்துக்கடவு திமுகவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார். மேலும் இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடைபெறும் தேர்தல் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார், அப்போது மக்கள் பலரும் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தை காண்பியுங்கள் என்று ஆரவாரம், புகைப்படத்தை காண்பித்தால் அவர் திட்டுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் தெரிவித்தார்.
முரட்டுத் தொண்டர்களை நாம் பார்த்துள்ளோம் ஆனால் முரட்டு அடிமைகளை பார்த்து உள்ளீர்களா? அதைக் கூறியதற்கு தான் அவர் திட்டுகிறார் என்றும் எனக்கு அவரைப் போல் காலில் விழுந்து அனுபவம் எல்லாம் கிடையாது என்று கூறி எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை காண்பித்தார்.
என்னை எடப்பாடி பழனிச்சாமி கண்ணா பின்னா என்று திட்டுகிறார் செத்துப் போ என்றெல்லாம் சொல்லுகிறார் நான் திட்டு வாங்குவதற்கு காரணமே மக்கள் நீங்கள் தான் என்றார்.
பின்னர் தொண்டர்கள் செல்போன் கொடுத்த நிலையில் அதில் செல்பி வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்தார், தொடர்ந்து செல்போனை கொடுக்க நினைத்த நிலையில் என்னை விட்டால் போட்டோகிராபர் ஆக்கி விடுவீர்கள் போல என்று தெரிவித்தார், கலைஞரின் பேரனாக கேட்கிறேன் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து சபரி கார்த்திகேயனை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


