கோவை: பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்று அமைச்சர் கோவி செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், அமைச்சர் கோவி செழியன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ்ச் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கோவை, கரூர், நீலகிரி என மூன்று மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் மற்றும் விவசாய அமைப்பினர் சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் பல்வேறு கோரிக்கைகளை வழங்கினர்.
கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை என்பது ஒரு தேர்தலின் கதாநாயகன். வேட்பாளர் எப்படி முக்கியமோ, அதைவிட முக்கியமாக திமுக கருதுவது தேர்தல் அறிக்கையைத் தான்.
தயாராகும் முத்தாய்ப்பான அறிக்கை, இப்போதைய சாதனைகளை முறியடிக்கும் விதமாக இருக்கும்.
பாரதியார் பல்கலைக்கழகம்
கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சி அடைந்த ஒரே மாநிலமாக தமிழகத்தை மாற்றி இருக்கிறோம். என்றார்.
தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,
“தமிழக அரசின் உயர்கல்வித் துறையையும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் தரத்தையும் குறைவாக மதிப்பிட்டு ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார். உயர்ந்த நிலையில் தமிழ்நாட்டு உயர் கல்வியில் இருந்தும், அதை புரியாத வண்ணம் ஆளுநர் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.
மேலும், தமிழக சட்டமன்றத்திற்கு என சில மரபுகள் இருக்கின்றன. ஆனால் அதை குழி தோண்டிப் புதைக்கும் விதமாக சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த ஆளுநர், அவரது உரையை புறக்கணித்து சென்றது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தைக் குறைத்து பேட்டி தந்ததற்காகவும், தமிழக சட்டமன்ற மாண்பை கடைபிடிக்காமல் அவமரியாதை செய்ததையும் கண்டிக்கும் வகையில் தான், தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பை அவர் மீது இருக்கக்கூடிய பொறுப்பற்ற நிலையை உணர்த்தும் விதமாகத்தான் அவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் பங்கேற்கவில்லை.
ஆளுநர் முதலில் தமிழர்களை மதிக்கட்டும், தமிழர் மாண்பை மதிக்கட்டும், சட்டமன்ற மாண்பை மதிக்கட்டும் அதன் பிறகு அவர் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்வது குறித்து யோசிக்கலாம்” என்றார்.

