கோவையில் நடைபெற்ற விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தன மணி பாரதி (18). இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை கோவர்தன மணி பாரதி கல்லூரி செல்வதற்காக தனது பைக்கில் பீளமேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் அவர் மீது உரசி சென்றது.
விபத்து
இதில் தடுமாறி கீழே விழுந்த கோவர்தன மணி பாரதி தலையின் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் கோவர்தன மணி பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவர்தன மணி பாரதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கோவர்தன மணி பாரதி உயிரிழந்ததை அறிந்த சக மாணவர்கள் மருத்துவமனை வளாகத்திற்குச் சென்று கதறி அழுதனர்.
மாணவர் உயிரிழப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

