கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளலூர் பகுதியில் புதிதாக திறக்கபட உள்ள FL2 மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறவழிச்சாலையில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் L&T புறவழிச்சாலை அருகே புதியதாக FL2 மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடையின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மதுபானக்கூடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடம் அமைக்க தொடர்ந்து அப்பகுதி மக்கள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில், இன்று காலை திடீரென வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம் தலைமையில் அக்கடையின் முன்பாக பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று L&T புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
“கடை அமைக்கப்படாது என்று உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறியும் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் ஊருக்குள் போதைப்பொருள் விற்பனையை தொடங்கினால், அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

