கோவை: கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது. 8ம் தேதி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவு வகைகள், தனித்துவமான அசைவ உணவு வகைகள் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கோவை கொங்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோவை அரிசி பருப்பு சாதம், விருதுநகர் பன் பரோட்டா, திருநெல்வேலி அல்வா, சேலம் தட்டுவடை செட்டு, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், நாமக்கல் வாத்து முட்டை மசாலா, நீலகிரி ராகி களி, சிக்கன் குழம்பு மற்றும் தேநீர் வகைகள், கரூர் முருங்கை சூப் வகைகள்,
கிருஷ்ணகிரி ராகி களி, கருவாட்டு குழம்பு, நாகப்பட்டினம் மீன் வறுவல், இரால் வடை, நண்டு சூப், மீன் போண்டா, ஈரோடு காளான் பிரியாணி, ஐஸ்கிரீம், கேக் வகைகள், சாக்லேட், பாதாம், ரோஸ்மில்க் திருப்பூர் சிறுதானிய உணவுகள் மற்றும் இதர அறுசுவை உணவு வகைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள், உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் Ready to Eat உணவு வகைகளான நிலக்கடலை பர்ஃபி ஹெல்த் மிக்ஸ், சிறுதானிய உணவுகள், உலர் பழங்கள், வர்க்கி. பிஸ்கட், வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட், தட்டு வடை 90 கிட்ஸ் தின்பண்ட வகைகள். தினை தின்பண்டங்கள் உள்ளிட்ட ஆயத்த உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையில் தயாரித்து, தகுந்த முறையில் Packaging செய்து விற்பனை செய்திட 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டு பல்வேறு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.



