கோவை: கோவையில் நாளை ஜிடி நாயுடு சிலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், வ.உசி மைதானத்தில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், தமிழ்நாடு தந்த அறிவியல் மாமேதைகளில் ஒருவரும், இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவரும், கல்வியாளராகவும், எளியோருக்கு உதவும் நற்குணம் வாய்ந்தவராகவும் விளங்கிய ஜி.டி நாயுடு அவர்களுக்கு கோயம்புத்தூரில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் ஜிடி நாயுடு அவர்களுக்கு சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடிவடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாளை (10.03.2026) காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி துணை மேயர்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மாமன்ற பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

