கோவை: தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து கோவையில் அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதனையடுத்து கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆளுங்கட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலான விளம்பரங்கள், பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் இருக்கக் கூடாது என்பதால், மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான பவன் குமார் தலைமையில், தேர்தல் நடத்தை விதிகளைச் செயல்படுத்துவதற்கான தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.

ஆட்சியர் அலுவலக வளாகம் மட்டுமின்றி, மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகளில் உள்ள அரசு விளம்பரங்களை அகற்றும் பணி ‘போர்க்கால’ அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலைகளும் மறைக்கப்பட்டு வருகின்றன.
“தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

