கோவை: போத்தனூர் ரயில் நிலையத்திலும் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழியை கருப்பு மைக்கொண்டு மர்ம நபர்கள் அழித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக இந்தி மொழி திணிப்பிற்கு பல்வேறு திராவிட கட்சிகளும், இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் ஊரின் பெயர் இந்தி மொழியில் இருப்பதை கண்டித்து அதனை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே ரயில் நிலையங்கள் முன்பு திராவிட கட்சியினரும், மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் ஊர் பெயர் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த சிங்காநல்லூர் என்ற வார்த்தையை கருப்பு மை கொண்டு மே 17 இயக்கத்தினர் அழித்தனர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மே 17 இயக்கத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் போத்தனூர் ரயில் நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழியை கருப்பு மை கொண்டு அழித்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கருப்பு மையை நீக்கினர். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

