கோவை: தன் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவனே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவான். இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கலாமணியை ஆதரித்து, காளப்பட்டி பகுதியில் சீமான் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். அப்படி குற்றம் சாட்டப்பட்ட அதிமுக இப்போது நல்ல கட்சியாக மாறிவிட்டதா? அதன் தலைவி குற்றச்சாட்டில் சிறையில் இருந்தபோது அந்த கட்சி எப்படி ஊழல் இல்லாத கட்சியாக மாறியது?
Read news: கோவையில் ஜெயின் சமூகத்தினரிடம் ஆதரவு திரட்டிய செந்தில் பாலாஜி…
கூட்டணியில் உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியை மதவாத கட்சி என்று கூறினர். இப்போது அந்த மதவாதத்தை விட்டு வெளியேறிவிட்டதா? எதற்காக கூட்டணி வைத்தீர்கள்? இது பிழைப்புவாதமும் சந்தர்ப்பவாதமும் ஆகும்.
மக்களின் நலனை விட தங்களின் தேர்தல் வெற்றியே முக்கியம் என கருதுகின்றனர். பதவியே முதன்மை என நினைக்கும் சந்தர்ப்பவாதிகள் இவர்கள்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு ரூபாய் கூட பெறாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். நல்லாட்சி வழங்கியிருந்தால் இலவச அறிவிப்புகள் தேவையில்லை. மக்கள் தாமாகவே ஆட்சி தொடரட்டும் என்பார்கள்.
பெண்களுக்கு சரிபாதி உரிமை வழங்கியது நாம்தான். மற்றவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். எங்களுக்கு தமிழ் சாதியே உள்ளது. வேறு எந்த சாதியும் இல்லை.
Read news: கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை- கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்…
சாதிக்க வேண்டும் என்றால் சாதியை விட்டு வருங்கள். மனிதநேயம் வேண்டும் என்றால் எங்களுடன் சேருங்கள்.
சீமான் பைத்தியக்காரன் என கூறுகின்றனர். மரம் என்றால் என்னவென்று அறியாதவர்கள் அப்படி கூறுகின்றனர். மரம் இல்லையெனில் மழையும் இல்லை, வாழ்வாதாரமும் இல்லை. இதை சொல்லிக்கொண்டே நான் வாக்கு கேட்கிறேன்.
கூட்டத்தில் நிற்க துணிவு தேவையில்லை. தனியாக நிற்கவே துணிவு தேவை. இரண்டு முறை நான் தோற்றேன். என்னை தோற்கடித்தது என் மக்கள் தான். ஒருநாள் அவர்கள் என்னை கொண்டாடும் காலம் வரும்.
தன்னையும் மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும் என்று பேசுபவருக்கே நம்பிக்கை இல்லை.
ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம். எனக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லவில்லை. எது சரியோ அதற்கு ஓட்டு போடுங்கள்.
Read news : கோடையில் கொட்டும் முடி – எளிய தீர்வு…!
எந்த தொழிலையும் செய்ய வெட்கப்படக்கூடாது. வேலை செய்யாமல் இருப்பதற்கு மட்டுமே வெட்கப்பட வேண்டும்.
இங்கு ஆடு, மாடு மேய்க்க வெட்கப்படுவார்கள். ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று ஒட்டகம் மேய்ப்பார்கள். டீ கிளாஸ் கழுவ வெட்கப்படுவார்கள். மற்ற மாநிலத்தவர்கள் வந்து அந்த வேலையை செய்து வருமானம் பெறுகின்றனர்.
இந்த தேர்தல் நமக்குக் கிடைத்த கடமை. அதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.

