கோவை:சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து தாக்கிய சம்பவத்தில் மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கணபதிபுதூர் 3வது தெருவில் வசிப்பவர் மதன்குமார் (22). இவரது சகோதரர் முருகன். இவர் கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் தங்கி உள்ள வீட்டின் மேல்மாடியில், முருகன் பணியாற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உட்பட 10 பேர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் மதன்குமார் வீட்டில் இருந்தார். அப்போது நீலாம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 6 பேர் அங்கு வந்தனர்.
மதன்குமாரிடம் சந்தோஷ், சூர்யா என்பவரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு மதன்குமார், சூர்யா இங்கு இல்லை என்று தெரிவித்தார்.
ஆனாலும் சந்தோஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து சூர்யாவை தேடினர். அப்போது அங்கு இருந்த மாணவர்களுக்கும் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள், மதன்குமார் மற்றும் மேல்மாடி அறையில் தங்கி இருந்த மாணவர்கள் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் மதன்குமார் மற்றும் ஸ்ரீதர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களான ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த தருண் (22), காந்திபுரம் சித்தாபுதூரைச் சேர்ந்த நிகில் (22), மேட்டூர் அய்யம்பாளையம் புதூரைச் சேர்ந்த மோகன் (19), வி.கே.கே. மேனன் ரோட்டைச் சேர்ந்த தேசிகன் (21), மற்றும் மேட்டூர் அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்த விபின் (19) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


