பிரபல இசையமைப்பாளர் என்னை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் என பாடகி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பிக் பாஸ் மாயா சகோதரி
பாடகி ஸ்வாகதா ஒரு இசைக்கலைஞர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயாவின் சகோதரி. இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த விரிவான பேட்டியில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்து பெரும் கவனம் ஈர்த்துள்ளார். அந்த பேட்டியில், தன்னை ஒரு பிரபல இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அந்த கடுமையான மனஉளைச்சலிலிருந்து வெளியே வர தனது குடும்பமே முக்கிய ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “அந்த நபர் பெரிய இசையமைப்பாளர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அடிப்படை இசை அறிவு கூட இல்லாதவர். இப்படிப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது எப்படி என்று புரியவில்லை,” என்று கடுமையாக விமர்சித்தார்.
பாலியல் துன்புறுத்தல்
மேலும், அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏற்பட்ட மன மற்றும் உடல் வேதனை குறித்து அவர் திறம்பட பேசினார். “அவர் என்னைத் தொட்ட இடங்கள் நினைவில் கூட வராதபடி, தோல் மாற்ற சிகிச்சை வரை மேற்கொண்டேன். என் மொபைலில் கூட அவரது பெயர் தோன்றாதபடி அமைத்துவிட்டேன்,” என்று அவர் தெரிவித்தார். இந்த அனுபவம் அவரை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதைக் காட்டும் வகையில் இந்த உரைகள் இருந்தன.

இப்போது அந்த பயம், மனஅழுத்தம் ஆகியவற்றை தாண்டி, தன்னம்பிக்கையுடன் வாழ்கிறேன் என்றும், இனி எதற்கும் அஞ்சாத மனநிலைக்கு வந்துவிட்டேன் என்றும் அவர் கூறினார். “அவரின் பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், உண்மையை பகிர்ந்துள்ளேன். அவர் என்னை அச்சுறுத்த முயன்றாலும், இனி நான் அஞ்சமாட்டேன்,” என்றார்.
பல பெண்களுக்கு சீண்டல்
அந்த நபர் தன்னிடம் மட்டும் அல்லாமல், பல பெண்களிடமும் இதேபோன்ற முறையில் நடந்துகொண்டதாகவும், சிலருக்கு அந்த மன உளைச்சலிலிருந்து மீள உதவியுள்ளதாகவும் ஸ்வாகதா கூறினார். அதேசமயம், இந்த விஷயங்கள் அந்த இசையமைப்பாளரின் குடும்பத்திற்கும் தெரிந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் உலகளவில் பேசப்பட்ட சில சர்ச்சைகளை விட கூட மோசமான நபர் அவர் என கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, இளம் வயது குழந்தைகள் கூட அவரது நடத்தைக்குள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
யார் அந்த இசையைமைப்பாளர்?
இறுதியாக, விரைவில் உறுதியான ஆதாரங்களுடன் அந்த இசையமைப்பாளர் யார் என்பதை வெளிப்படுத்துவேன் என்றும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டி வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. அந்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி பெரிதாக பேசப்படுகிறது. அதேசமயம், சிலர் ஸ்வாகதாவை நேரடியாக குற்றவாளியை வெளிப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.


