தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் கடந்து வந்த பாதை, அவர் எதிர்கொண்ட சவால்கள், அவர் முன் உள்ள சவால்கள் உள்ளிட்டவற்றை இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
தமிழக அரசியலில் இன்று ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த விஜய், இன்று நிஜ வாழ்விலும் மக்களின் நாயகனாக அரியணை ஏறியுள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.
இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும், மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வரிசையில், தற்போது விஜய் இணைந்துள்ளார். வெறும் சினிமா பிரபல்யமாக மட்டும் இல்லாமல், கடந்த பல ஆண்டுகளாக திட்டமிட்டு அடித்தளம் அமைத்து, இன்று இந்த உயரத்தை அவர் எட்டியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை நோக்கிய அவரது பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. தடைகள், விமர்சனங்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளைக் கடந்து இன்று அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளது ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாகும்.
விஜய்யின் ஆரம்ப கால வாழ்க்கை
ஜோசப் விஜய் சந்திரசேகர் என்ற இயற்பெயர் கொண்ட விஜய், ஜூன் 22, 1974 அன்று சென்னையில் பிறந்தார். இவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு திரைப்பட இயக்குநர், தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு பின்னணிப் பாடகி.
ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்திருந்தாலும், விஜய்க்கு தொடக்க காலத்தில் எல்லாம் சுலபமாக அமையவில்லை. அவரது தங்கை வித்யாவின் மரணம் விஜய்யின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மிகவும் சுட்டியாக இருந்த சிறுவன் விஜய், தங்கையின் மறைவிற்குப் பிறகு மிகவும் அமைதியானவராக மாறினார்.
சினிமா வாழ்க்கை
விஜய்யின் சினிமா பயணம் 1992-ல் “நாளைய தீர்ப்பு” படத்தின் மூலம் தொடங்கியது. ஆரம்ப காலங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அவரது தோற்றம் மற்றும் நடிப்புத் திறன் குறித்து பல எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், விடாமுயற்சியால் “பூவே உனக்காக” படத்தின் மூலம் ஒரு பெரிய திருப்புமுனையைச் சந்தித்தார். அதன் பிறகு “காதலுக்கு மரியாதை” தொடங்கி, “திருமலை” படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். “கில்லி”, “போக்கிரி”, “துப்பாக்கி” என வரிசையாக பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் “வசூல் சக்கரவர்த்தியாக” மாறினார்.
அர்ப்பணிப்பு
ஒவ்வொரு படத்திலும் தனது நடனம் மற்றும் உடல்மொழியில் அவர் காட்டிய முன்னேற்றம் ரசிகர்களைக் கவர்ந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, தனது திரைப்படங்களின் வாயிலாக சமூக கருத்துக்களைப் பேசத் தொடங்கினார். “கத்தி”, “மெர்சல்”, “சர்கார்” போன்ற படங்கள் அவரை அரசியல் களத்திற்குத் தயார்ப்படுத்தின.
சமூகத் தொண்டுகள்
திடீரென்று ஒரு நாளில் விஜய் அரசியலுக்கு வந்துவிடவில்லை. இதற்கான அடித்தளத்தை அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே போடத் தொடங்கிவிட்டார். விஜய் மக்கள் இயக்கம் (VMI) என்ற பெயரில் தனது ரசிகர் மன்றங்களை ஒரு சமூக சேவை அமைப்பாக மாற்றினார். அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அவர் செய்த நற்பணிகள் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
முக்கிய நற்பணிகள்
ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதை ஆண்டுதோறும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கிராமப்புறங்களில் ரத்த தான முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ முகாம்களை தனது இயக்கத்தின் மூலம் நடத்தினார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு கௌரவம் செய்து ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்வு, அவர் ஒரு தலைவராக உருவெடுக்கப் போகிறார் என்பதன் முன்னோட்டமாக அமைந்தது.
மேலும், இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு மட்டுமல்லாது கேரளா, இலங்கை மக்களுக்கும் அவர் உதவி செய்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்

பல ஆண்டுகால யூகங்களுக்குப் பிறகு, விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும்போதே, அதனைத் துறந்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “யாரிடமும் கைக்கட்டி வேலை செய்யத் தேவையில்லை, மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன்” என்ற அவரது முழக்கம் இளைஞர்களைப் பெருமளவில் ஈர்த்தது.
தேர்தல் களம்
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தினார். அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம், மற்ற அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அவரது பிரச்சார நடை மிகவும் இயல்பாகவும், மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையிலும் இருந்தது.
பிரச்சார யுக்திகள்
சமூக வலைதளங்கள் வாயிலாக தனது கொள்கைகளைத் துல்லியமாக இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தார். பழைய அரசியல் முறையை மாற்றுவோம், நேர்மையான நிர்வாகத்தைத் தருவோம் என்ற வாக்குறுதி நடுநிலை வாக்காளர்களைக் கவர்ந்தது.
தேர்தலில் வெற்றி
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றியது.
பெரும்பான்மைக்கு 118 என்ற எண்ணிக்கை தேவைப்பட்ட நிலையில், விஜய் முதல்வராகும் நிகழ்வு தள்ளிப்போனது. இது விஜய்க்கு பெரும் சவாலாக அமைந்தது. இதனிடையே காங்கிரஸ் அவருடன் கை கோர்த்தது. இதன் மூலம் கூடுதலாக 5 இடங்கள் கிடைத்தன.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநரை சந்தித்த விஜய்க்கு ஏமாற்றம் மிஞ்சியது. 118 என்ற எண்ணிக்கை வேண்டும் என்று ஆளுநர் முரண்டுபிடிக்க, சட்டப்பேரவையில்தான் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
முதலமைச்சர் விஜய்
இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் ஆகியவை விஜய்க்கான தங்களது ஆதரவுகளைத் தெரிவித்தன. இதனால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விஜய்யை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, இன்று காலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும், 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சவால்கள்
மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பது ஒரு பெரும் சவாலாக அவருக்கு முன்னால் உள்ளது. படித்த இளைஞர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவரது முக்கிய வாக்குறுதியாகும்.
அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதிலும், திமுக அரசின் மீதான தனது பிரதான குற்றச்சாட்டுகளான சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிலும் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மத்திய பாஜக அரசையும் விமர்சிக்கத் தவறாத விஜய், தமிழகத்திற்கான நிதியை எப்படிப் பெறப்போகிறார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தமிழகத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ள நிலையில், இது விஜய்க்கு பெரும் தலைவலியாகப் பார்க்கப்படுகிறது.
முதல் கையெழுத்து
பதவியேற்ற உடனேயே, விஜய் போடும் முதல் கையெழுத்து எது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, மின் கட்டணத்தில் 200 யூனிட்டுகள் இலவசம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 என்ற வாக்குறுதிகளில் எது முதல் கையெழுத்தாக இருக்கும் என்று மொத்த தமிழ்நாடே ஆர்வமாக உள்ளது.


