சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன்படி, 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்புப் படை, போதைப்பொருள் தடுப்புப் படை ஆகிய மூன்று திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
மேலும், இளைஞர்களை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்பது நமது அரசின் கடமை என்றும், அதனை இன்று முதல் செய்வேன் என்றும் விஜய் சூளுரைத்தார். அதன்படி டாஸ்மாக் கடைகளை மூட தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் தற்போது 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Read news : ‘ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்கலாம்’ – பிரதமர் மோடி பேச்சின் பின்னணி என்ன?
அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்த மூன்று இடங்களின் அருகிலும் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் முதல் வில்லனாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை, பதவியேற்ற முதல் இரண்டு நாட்களிலேயே மூட விஜய் உத்தரவிட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.



