கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 1/2 அடியாக சரிந்த நிலையில், பில்லூர் அணையில் நீர்மட்டம் 81 அடியாக உயர்ந்தது.
கோவை மாநகராட்சி சார்பில் பொது மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சிறுவாணி அணை நீர் மாநகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழக எல்லைக்குள் இருந்தாலும், அணையானது கேரளா வனப்பகுதியில் உள்ளது.
இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. ஆனால் இந்த அணையில் 44 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரள அரசு அனுமதிக்கிறது. கடந்த ஆண்டு பருவமழை காலத்தின் போது இந்த அணை 44 அடி கொள்ளளவை எட்டியது.
இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் மழை பெய்யாததால், அணையின் நீர்மட்டம் வெகுவாக சரியத் தொடங்கியது. தற்போது அணையில் 10 1/2 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு 40 எம்.எல்.டி ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் 3-ல் இருந்து கூடுதல் தண்ணீர் பெறப்பட்டு மாநகராட்சி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும் போது;
சிறுவாணி அணை முழுமையாக நிரம்பினால், அந்த அணையில் இருந்து 101 எம்.எல்.டி வரை தண்ணீர் எடுக்கப்படும். தற்போது அணை நீர்மட்டம் 10 1/2 அடியாக குறைந்துள்ளது.
Read news: கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன தெரியுமா?
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வந்தால் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால் இன்னும் போதிய மழை பெய்யவில்லை. இந்த மழை இன்னும் சில நாட்கள் நீடித்தால் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. தற்போது அணையில் இருந்து ஒரு நாளைக்கு 40 எம்.எல்.டி (4 கோடி லிட்டர்) குடிநீர் எடுக்கப்படுகிறது.
அதே நேரத்தில் கோவைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு பிரதான அணையான பில்லூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி அணை நீர்மட்டம் 77 அடி என்ற அளவில் இருந்தது. தற்போது 4 அடி உயர்ந்து அணை நீர்மட்டம் 81 அடி ஆக உள்ளது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையில் உள்ள தண்ணீரை கொண்டு இந்த மாதம் இறுதி வரை குடிநீர் வழங்க முடியும். அதற்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.



