கோவை: கோவையில் பெண்களிடம் தொடர்ந்து நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் அருகே உள்ள கார்மல் நகரைச் சேர்ந்தவர் சாந்தி (60). இவர் தனது வீட்டின் அருகே சிறிய கடை நடத்தி வருகிறார். கடந்த 12ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி அளவில் சாந்தி கடையில் இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் பேனா மற்றும் பென்சில் கேட்டு பேசினார்.
சாந்தி பொருட்களை எடுத்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த சாந்தி செயினை பிடித்துக் கொண்டு திருடனுடன் போராடினார். இதில் செயின் அறுந்து, அரை பவுன் தங்க நகையுடன் அந்த நபர் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து சுந்தராபுரம் போலீசில் சாந்தி புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கோவை பீளமேடு கோயில் வீதியைச் சேர்ந்த நித்யா (38) என்ற பெண், அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி இரவு வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்றார்.
நித்யா சத்தமிட்டதும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியிருந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசில் நித்யா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் அடுத்தடுத்து நடந்த இந்த நகை பறிப்பு சம்பவங்கள் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



