கோவை: கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, கயிறு அறுந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (42). பெயிண்டராக பணியாற்றி வந்த இவர், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார்.
உயரமான கட்டிடத்தில் கயிறு கட்டி அதில் அமர்ந்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கயிறு திடீரென அறுந்தது. இதனால் நிலைதடுமாறிய ராமன் மேலிருந்து கீழே விழுந்தார்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் ராமனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


