கோவை: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு உடனடியாக அமைச்சரை நியமிக்க வேண்டுமென டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி 500 மீட்டருக்கு உள்ளிருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அந்த கடைகள் மூடப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திலும் சுமார் 60க்கும் மேற்பட்ட கடைகளை மூடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டாஸ்மாக் சங்கத்தினரை அழைத்துப் பேசாமல் முதலமைச்சர் திடீரென இந்த உத்தரவை பிறப்பித்ததால் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர்களது குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளவர்கள் என்றும் தொடர்ந்து டாஸ்மார்க் சங்கத்தினர் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும் இதனை நம்பி பணியாற்றி வந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக இந்த ஊழியர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
டாஸ்மார்க் கடைகளை மூடுவது என்பது புதிதல்ல என்று கூறிய அவர்கள் முந்தைய அரசுகளும் மதுபான கடைகளை மூடியது ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.
மேலும் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டாலும் தனியார் மதுபான கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர்கள் இந்த துறைக்கான அமைச்சர் தற்பொழுது வரை நியமிக்கப்படவில்லை என்பதால் உடனடியாக இந்த துறைக்கான அமைச்சரை நியமிக்க வேண்டும் அப்பொழுதுதான் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் அவரிடம் தெரிவிக்க முடியும் என்று கூறினர்.
மேலும் தற்பொழுது வரை டாஸ்மாக் ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் தான் பணியாற்றி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.



