கோவை: கோவையில் குட்கா தயாரிப்பு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று திமுக மாநில தீர்மானக் குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவருடன் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட பிரதிநிதி மாதப்பூர் தங்கராஜ், ராவத்தூர் செல்வராஜ், பாப்பம்பட்டி பரமசிவம், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன், வழக்கறிஞர்கள் மதிவாணன், ராஜமாணிக்கம், ஹேமந்த்குமார், குணசேகரன், ராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


