கோவை: அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கோவை வழியாக வந்துகொண்டிருந்தது. அந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வந்தனர்.
நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் வட கோவை ரயில் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் பயணம் செய்த ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
CLICK HERE TO READ NEWS:கோவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்!
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் அவரது பெயர் மற்றும் முழு விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
உயிரிழந்த நபரின் கையில் பச்சைக்குத்து இருந்ததாகவும், உடலில் ஊதா நிற டவுசர் மட்டும் அணிந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவர் ரயிலில் இருந்து எப்படி தவறி விழுந்தார்? அவர் யார்? என்பது குறித்து வட கோவை ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




