கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சில பெட்ரோல் பங்குகளில் நார்மல் பெட்ரோல் இருப்பு குறைந்து, சில இடங்களில் முழுமையாக தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நார்மல் பெட்ரோல் லோடு வருவதில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் நார்மல் பெட்ரோலுக்கு பதிலாக லிட்டருக்கு சுமார் ரூ.9 அதிக விலை கொண்ட பவர் பெட்ரோலை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், தற்போது பவர் பெட்ரோல் இருப்பும் படிப்படியாக குறைந்து வருவதாக பெட்ரோல் பங்க் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பெல்லாம் நார்மல் மற்றும் பவர் பெட்ரோல் இரண்டிற்கும் லோடு பதிவு செய்தால் அதே நாளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது நார்மல் பெட்ரோல் லோடு வருவதில் நான்கு நாட்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டு வருவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை நீடித்தால், வாகன ஓட்டிகள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



