கோவை: சூலூர் சிறுமி பாலியல் வழக்கில் 819 பக்க குற்ற பத்திரிகையை கோவை போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
கோவையை அடுத்த சூலூர் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டு சேர்ந்த கார்த்தி(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவருக்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கார்த்திக்கை கைது செய்த போது அவர், போலீஸ் பிடியில் தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில் கார்த்திக்கின் கை, கால் உடைந்தது.
தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை சிறை கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி பவன் குமார், கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமாரிடம் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது குண்டர் சட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி மீது சக கைதிகள் சமீபத்தில் சமையல் பாத்திரங்களால் சரமாரியாக தாக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று காலை சூலூர் போலீசார் இ-பைல் மூலம் 819 பக்க குற்றப்பத்திரிகையை கோவை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரின் வாக்குமூலம் ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Coimbatore Sulur POCSO Case Chargesheet Filed
சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கில் 819 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.


