கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின் தட்டுப்பாடு காரணமாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், மின் பற்றாக்குறை இல்லை என்று மின்வாரியம் தெரிவித்து வருகிறது.
மேலும், வானிலை காரணங்களாலும், மின் மாற்றிகள் மற்றும் மின் வயர்களில் ஏற்படும் பழுதுகள், மரக்கிளைகளால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவும் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
தினமும் சுமார் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாகவும், அதுமட்டுமின்றி பகல் நேரங்களிலும் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வாறு அறிவிக்கப்படாத மின்தடைகளால் தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில், இந்த விவகாரத்தில் கோவை மின்வாரிய அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதா? எந்த பகுதி என்பதை கமென்டில் தெரிவிக்கலாம்.


