கோவை: கோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மன்ற விசாரணையில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி இன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா அவரது தலைமையில் கோவை நீதிமன்றங்களிலும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை சூலூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் கடந்த 2024 ஆம் ஆண்டு கோவை மாவட்ட போத்தனூர் செட்டிபாளையம் சாலை பகுதியில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மித்ரகாந்த் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக தொண்ணூறு லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது.
அதே போல் 2025 ஆம் ஆண்டு ஆனைக்கட்டியிலிருந்து கோயமுத்தூர் மெயின் ரோட்டில் ஏற்பட்ட நான்கு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மணிராஜ் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக தொண்ணூறு லட்சம் வழங்கப்பட்டது.
இம்மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள் காசோலை வழக்குகள் வாகன விபத்து வழக்குகள் சிலிவ் வழக்குகள்நிலம் சொத்து பாகப்பிரிவினை வாடகை விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் வங்கி கடன்கள் மற்றும் கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள்,விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சனை வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் (Pre-Litigation) ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 4782 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.
இதன் மொத்தத்தீர்வு தொகை ரூ 1 கோடியே 11 இலட்சத்து 42 ஆயிரம் ஆகும். மேலும், இம்மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 58 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த 06 தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.


