கோவை: கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கோவில் பிரசாதம் தருவதாக கூறி பெண்ணை காரில் கடத்தி நகைகளை பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கோவை அடுத்த மதுக்கரை அருகே திருமாலயம்பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கநாதன். இவருடைய மனைவி மோனிகா. தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டில் சென்னை திருவாரூரைச் சேர்ந்த விஸ்வநாதன் அவருடைய மனைவி ஷோபா ஆகியோர் வாடகைக்கு குடி இருந்தனர்.
இதை அடுத்து அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் கோவை வந்த அந்த தம்பதி மோனிகாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கோவில் பிரசாதம் கொண்டு வந்து உள்ளோம், நீங்கள் கல்லூரிக்கு வெளியே வந்து நில்லுங்கள் நாங்கள் அங்கு வந்து தருகிறோம் என்று கூறி உள்ளனர்.
அதை நம்பிய மோனிகா கல்லூரியின் முன்பு காத்து நின்றார். அப்பொழுது ஒரு காரில் வந்த விஸ்வநாதன் – சோபா ஆகியோர் கோவில் பிரசாதத்தை கொடுப்பது போல் மோனிகாவின் அருகே சென்றனர். பின்னர் அவர்கள் திடீரென மோனிகாவை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். உடனே அவர் அலற முயன்றார். ஆனால் சத்தம் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அவர் சத்தம் போடவில்லை.
இதை அடுத்து அந்த தம்பதி மோனிகாவின் கழுத்தில் கிடந்த தாலிக்கொடி, செயின், மோதிரம் ஆகியவற்றைப் பறித்தனர். பின்னர் அவரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கி விட்டு தப்பிச் சென்றனர். பறிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மோனிகா அளித்த புகாரின் பேரில் க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து எட்டிமடை மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதற்குள் ஒரு தம்பதி இருந்தனர்.
விசாரணையில் அவர்கள் விஸ்வநாதன் – சோபா தம்பதி என்பதும், மோனிகாவிடம் நகையை பறித்து விட்டு கேரளாவுக்கு தப்பித்து செல்ல முயன்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.


