கோவை: புலியகுளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அந்தோனியார் திருத்தலத்தின் 40-ஆம் ஆண்டு ரூபி ஜூபிலி (Ruby Jubilee) திருவிழா மிகச் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தோனியார் திருத்தலத்தின் மின் அலங்காரங்கள், மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தது உள்ளிட்ட நிகழ்வுகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.
புலியகுளம் புனித அந்தோனியார் திருத்தலத்தின் அருட்தந்தை அருண் கூறுகையில்,
“உங்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஆலயம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரூபி ஜூபிலி ஆண்டை நாங்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்த வருடம் 17 தேர்களுடன் பவனி நடைபெற்று வருகிறது.
இந்த நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து புனித அந்தோனியாரை தரிசித்துச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு முழுவதும் ரூபி ஜூபிலி விழாவை சிறப்பாகக் கொண்டாட உள்ளோம். ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இந்த ஆண்டை சிறப்பிக்க இருக்கிறோம்.
மேலும், ஆலய சீரமைப்புப் பணிகளும் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, அந்தோனியாரின் உதவியைத் தேடி வாருங்கள். அவருடைய ஆசியைப் பெற்றுச் செல்லுங்கள். அனைவரையும் அன்போடு வரவேற்று ஆசி வழங்குகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது வரை கிட்டத்தட்ட 20,000 முதல் 25,000 பேர் வரை ஆலயத்திற்கு வந்து சென்றிருப்பார்கள். புனித அந்தோனியார் மீதான பக்தி அனைத்து சமய மக்களிடமும் உள்ளது. எல்லா சமயத்தினரும் அவரை தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அவர் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.
VIDEO
ரூபி ஜூபிலி ஆண்டை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சமூக மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், ஆலய மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடிய இந்தத் திருவிழா, கோவையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


