கோவை: கோவையில் வெகுவிமர்சையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது.
கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் நடைபெற்ற இதில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்தவர்கள் பிடித்த வண்ண வண்ண உடைகளை அணிந்து அவர்களுக்கு பிடித்தார் போல் அலங்கரித்துக் கொண்டனர்.
இந்த பேரணியில் “என் வாழ்க்கை என் உடல் என் காதல், என் உடலை வன்புணர்வு செய்தாலும் உண்டாகும் வலி ஒன்றுதான், உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியும் வண்ண வண்ண பலூன்களை கையில் ஏந்தியும் வானவில் நிறத்தில் நீளமான துணியை ஏந்திய படியும் பேரணி மேற்கொண்டனர்.
ரேஸ் கோர்ஸில் வழக்கமாக இந்த பேரணி நடைபெறும் என்றும் ஆனால் அங்கு பாதுகாப்பு இல்லை என்று காரணம் கருதி அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் திருநர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும் தங்களுக்கு என சொந்த வீடுகளை அரசாங்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
திருநர் மக்களுக்கு மட்டும் திருமண செய்துகொள்வதற்கு உரிமை கிடைத்துள்ளதாகவும் அந்த உரிமை ஒருபால் ஈர்ப்பாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றனர். மேலும் பெற்றோர்கள் எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அரசாங்கம் தங்களை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள் போல் பார்க்கிறது ஆனால் தற்போது தேச சமூகத்தில் அவ்வாறு இல்லை நாங்களும் அதிகமாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பேரணியை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.


