கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற தன்னை அங்கிருந்த ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான மக்கள் மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இதையொட்டி, கோவை ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே வந்த முதியவர் ஒருவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்த முதியவரிடம் சென்று, சாலையில் அமரக் கூடாது என்று கூறினர்.
அப்போது அந்த முதியவர் தனது பெயர் மணிவாசகம் (68) என்றும், வடவள்ளியைச் சேர்ந்த தனக்கு கை, கால் மற்றும் உடல் வலி பாதிப்புக்காக கடந்த 1-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு தனக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து கேட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
பின்னர், அவரை சமாதானப்படுத்திய போலீசார், தனது புகார் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


