கோவை: தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில், டெண்டர்கள் வெளிப்படையாகவும், கமிஷன் இன்றியும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவையில் லஞ்சம் பெறும் உள்நோக்கத்துடன் சிறிய ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமான மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே மேற்கொண்ட அரசு ஒப்பந்தப் பணிகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் 5 நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில், 5-ம் நிலையில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு போதிய அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் இல்லாத காரணத்தால், அவர்கள் ரூ.50 லட்சத்திற்குள் உள்ள பணிகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் விதிமுறைகள் உள்ளன.
ஆனால், ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை எடுக்கும் தகுதியில் உள்ள 3-ம் நிலையில் உள்ள ஒப்பந்ததாரர்களைக் கூட, 5 ஆண்டுகள் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி அதிகாரிகள் நிராகரிப்பதாகவும், பழைய ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்கவும், லஞ்சம் பெறும் நோக்கிலும் அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவதாகவும் ஒப்பந்த நிறுவனங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து பீம்ஜி என்ற ஒப்பந்த நிறுவனத்தினர் கூறுகையில், “கிணத்துக்கடவு வட்டாரத்தில் காரசேரி – அரசம்பாளையம் சாலை அமைக்க ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்திற்கு அரசு டெண்டர் அறிவித்தது.
அதற்கு பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்தனர். இதில் ரூ.90 ஆயிரம் குறைவாக ஒப்பந்தப்புள்ளி மதிப்பீடு செய்து நாங்களும் விண்ணப்பித்தோம். டெண்டர் சமர்ப்பித்தவர்களில் குறைந்த தொகையை குறிப்பிட்டதால் நாங்கள் முதலிடத்தில் இருந்தோம். ஆனால், எங்களை உட்பட புதிய ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் அனுபவம் இல்லை என்று கூறி நிராகரித்துள்ளனர்.
பழைய ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் ஒப்பந்தம் வழங்கும் வகையில், விதிமுறைகளில் இல்லாத காரணங்களைக் கூறி எங்களை நிராகரித்துள்ளனர். இதனால் புதிதாக வரும் இளைஞர்கள் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


