கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலக நிர்வாகம் மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தது.
தகவலின் பேரில் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் பிரிவு போலீசார், மோப்பநாய் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அலுவலக அறைகள், வளாகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டது.
நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. விசாரணையில், மிரட்டல் மின்னஞ்சல்கள் ‘டார்க் நெட்’ தளங்களை பயன்படுத்தி அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மின்னஞ்சலின் உண்மையான மூலத்தை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் நீடித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பாஸ்போர்ட் அலுவலகம், தபால் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் இதுபோன்ற மிரட்டல்கள் பலமுறை வந்துள்ளன.
கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டும் இதுவரை 40-க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



