கோவை: கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் சடலத்தை தோண்டி எடுத்து 3 பவுன் தங்க செயினை திருடியதாக உறவினர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சவுரிபாளையம் உடையாம்பாளையம் ரோட்டை சேர்ந்த மீன் வியாபாரி நாகராஜ் (56) உடல்நலக்குறைவால் கடந்த 6ம் தேதி உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் சவுரிபாளையம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர் அணிந்திருந்த மீன் டாலருடன் கூடிய 3 பவுன் தங்க செயினும் உடலுடன் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி காரியம் நடைபெற்றபோது, நாகராஜின் மகன் வெங்கடேஷ் குமார் (32) சுடுகாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கல்லறை சரியாக மூடப்படாமல் மண் சிதறிய நிலையில் இருந்ததையும், துர்நாற்றம் வீசியதையும் கவனித்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, கடந்த 16ம் தேதி நாகராஜின் உறவினர் சக்திவேல் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (46) ஆகியோர் சுடுகாட்டுக்கு வந்து சடலத்தை தோண்டி எடுத்ததாக தெரியவந்தது.
அவர்கள் நகையை எடுத்துச் சென்று ஆசிட் ஊற்றி சுத்தம் செய்து, பின்னர் பூ மார்க்கெட்டில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேஷ் குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சக்திவேல், மணிகண்டன் மற்றும் உடந்தையாக இருந்ததாக கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து மணிகண்டன் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மணி, ரஞ்சித், கார்த்தி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



